11 அக்டோபர், 2010

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு



கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மக்களுக்கு சாட்சியம் வழங்குவதற்காக கால அவகாசம் வழங்கியிருந்தது. கண்ணீர் மல்க சாட்சியமளிக்க வருகை தந்திருந்த அவர்களைப் பார்க்கும்போது இந்தப் பரிதாப நிலைக்கு யார் காரணம் என்றே வினா எழுப்பத் தோன்றுகிறது.

இறுதிக்கட்ட மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட பலரின் நிலை என்னவானது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

இந்தத் தகவலை வெளிப்படையாகச் சொல்லி நேற்றும் நேற்று முன்தினமும் ஆணைக்குழுமுன் நீதிகேட்டு நின்ற பெற்றோர், மனைவிமார் வெளிப்படுத்திய தகவல்கள் அதிர்வலைகளை உண்டுபண்ணுகின்றன.

"2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஓமந்தை திறந்தவெளி மைதானத்தில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் எனது கணவரும் இருந்தார். ஆனால் அவரைக் கண்ட இறுதி தினம் அதுவாகத்தான் இருக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தயவு செய்து அவரை மீட்டுத் தாருங்கள்"

"இறுதிக்கட்ட மோதலின்போது சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அது உண்மையா?"

"எனது கணவர் கொழும்பில் வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார். உங்களைப்போன்ற பலரிடம் கண்ணீர்விட்டு முறைப்பாடு செய்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது எனது கணவரைக் காட்டுங்கள்"

இவ்வாறு ஏராளமானோர் கதறியழுது கேட்ட கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அளிக்கும் பதில்தான் என்ன?

கருணா, பிள்ளையான் குழுவினர் எனக் கூறி தங்களது உறவுகளைக் கடத்திச்சென்றோர் குறித்தும் பொதுமக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

இரகசிய சாட்சியங்கள்

அந்த சாட்சியங்கள் இரகசியமாகப் பதிவுசெய்துகொள்ளப்பட்டன.

இராணுவ சீருடையில் வந்து கடத்தியோர் குறித்து பொலிஸ் நிலையங்களிலும் அரச தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூலம் முறையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். அந்த நம்பிக்கைக்குப் பதிலாக நியாயமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் ஆணைக்குழுவின் விசாரணை நடைபெற்ற போது இதேபோன்று பெருந்திரளானோர் ஏக்கம் நிறைந்த, கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

குற்றவாளிகள் எனின் தண்டனை வழங்கப்பட வேண்டும். நிரபராதிகள் எனின் விடுவிக்கப்பட வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் தண்டிக்கப்பட்டோரின் நிலை என்ன? இத்தனை குடும்பங்களின் சுமைகளையும் யார் தாங்கப்போகிறார்கள்?

இந்தக் கண்ணீருக்கு விடை என்ன என்பது போன்ற கேள்விகள் மனதின் மையங்களிலிருந்து எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆணைக்குழு தரும் பதில் மூலம் விரைவில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக