10 ஆகஸ்ட், 2010

எதிர்த்தரப்பிலிருந்து 15 எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் எதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான விருப்பத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்று ஜனாதிபதி கருதுவதால் என்ன நடக்கும் என்று தெளிவாக கூற முடியாது என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

மேலும் சில எம்.பி. க்கள் ஆளும் தரப்புக்கு செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் கூறுகையில் :

எதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஆனால் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்று தற்போது ஒன்றும் கூற முடியாது நிலைமை காணப்படுகின்றது. காரணம் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். எனவே இது தொடர்பில் தெளிவான தீர்மானம் இல்லை.

பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் உள்ள முன்வரிசை பின்வரிசை மற்றும் தமிழ் முஸ்லிம் எம்.பி. க்களும் இந்த 15 பேரில் அடங்குகின்றனர். ஆனால் அவர்களின் பெயர்களை என்னால் கூற முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக