5 ஏப்ரல், 2010

தேர்தலின் பின் 7 நாட்கள் வரை பேரணி நடத்தத் தடை:பிரதி பொலிஸ் மா அதிபர்







எதிர்வரும் பொதுத்தேர்தல் முடிவடைந்து ஏழு நாட்கள் வரை ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தடைசெய்யப் பட்டுள்ளதாகத் தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள 2584 நடமாடும் பாதுகாப்பு பிரிவுகளும் செயற்பட ஆரம்பிக்கவுள்ளன.

அதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள், தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும் எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணிக்கு வாக்குச் சீட்டுக்கள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

19,500 முப்படையினரும் 58,700 பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் இன்று முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேட்பாளர்கள் அனைவரும் தமது பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடிவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்கள், வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் என்பவற்றுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் தபாலகங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவிக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட, பொதுத் தேர்தலுக்குப் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 413 பொலிஸ் பிரிவுகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் தாம் வாக்களிக்கும் வாக்குச்சாவடியைத் தவிர வேறு வாக்குச் சாவடிக்கு செல்வதாயின் வேட்பாளருக்குரிய ஆளடையாள அட்டையுடன் மட்டுமே செல்லமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக