21 செப்டம்பர், 2010

சிட்னியில் கூறைமீதேறி அகதிகள் ஆர்ப்பாட்டம்; தற்கொலை செய்வதாகவும் எச்சரிக்கை

சிட்னியின் வில்வூட் தடுப்பு முகாம் கூறையின் மீதேறி ஆர்ப்பாட்டம் செய்துவரும் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த 11 பேரும், தமது புகலிட கோரிக்கையை ஆஸி. குடிவரவு திணைக்களம் மீள் பரீசீலனை செய்யாவிட்டால், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பிஜி நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஜொசிபா ரலினி என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவரது மரணம் தொடர்பாக எவ்வித மேலதிகத் தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறு சம்பவம் : ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்

கரடியனாறில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் தெரிவித்துள்ளார்.

"வெடிப்புச் சம்பபத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்து : நால்வர் பலி

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆனமடுவப் பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் நால்வர் பலியானதாகவும் எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். காயமடைந்த சாரதி உட்பட 20 பேர் ஆனமடுவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் சடலங்கள் ஆனமடுவ வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

காணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் மன்றாட்டம்

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முல்லைத்தீவில் பொதுமக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை முல்லைத்தீவு செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போதே குழுமுன் தோன்றி சாட்சியமளித்தவர்களும் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

புதுமாத்தளனிலிருந்து பாதுகாப்புத் தேடி யாழ்ப்பாணம் நோக்கி படகில் வந்துகொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சகோதரியின் கணவனை கண்டுப்பிடித்துத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கள்ளிப்பள்ளியைச் சேர்ந்த இரட்ணசிங்கம் ஈஸ்வரி கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு முன்னிலையில் நேற்று இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்; இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்புத் தேடி முள்ளிவாய்க்கால் வரை வந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக 20 பேருடன் படகொன்றில் நாம் சென்றுகொண்டிருந்தோம்.

அப்போது இடம் பெற்றஷெல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் எனது சகோதரியும் பலியானார். எஞ்சிய 12 பேருடன் நாம் சென்றுகொண்டிருந்த போது கடற்படையினரால் நாம் கைது செய்யப்பட்டு புல்மோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

இதன் போது 40 முதல் 50 வரையான படகுகளை கடற்படையினர் கட்டியிழுத்துச் சென்றதை நாம் கண்டோம். அவ்வாறு படகில் கொண்டு செல்லப்பட்ட எனது சகோதரியின் கணவர் காணாமல் போயுள்ளார். இதுவரையில் அவரை நாம் காணவில்லை. அவரை எமக்கு மீட்டுத் தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த துணுக்காயைச் சேர்ந்த சின்னத்துரை சத்தியசீலன் தெரிவிக்கையில்; எனது மகள் சத்தியேஸ்வரி விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக 25.02.2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டு முன்னரங்கப்பகுதியில் விடப்பட்டிருந்த போது காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத காலமாக நானே அவரை பராமரித்து வந்தேன். பின்னர் இராணுவத்தினரால் புதுமாத்தளன் பகுதி கைப்பற்றப்பட்டபோது அவர் காணாமல் போயிருந்தார். அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வன்னியிலிருந்து விடுதலைப்புலிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தமது மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் கேள்வி எழுப்ப முற்பட்ட போது இதனை இரகசியமாக பதிவு செய்ய வேண்டுமென கூறிய ஆணைக்குழுவினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அவரின் வாக்குமூலத்தினை மட்டும் பதிவு செய்து கொண்டனர்.

ஆணைக்குழு விசாரணையினை ஆரம்பித்த போது 300க்கும் மேற்பட்டவர்கள் செயலக வளவில் கூடி நின்று தமது காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை கண்ட ஆணைக்குழுவினர் அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை விநியோகம் செய்து காணாமல்போனோரது விபரங்களையும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு

வட மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உள்ளூராட்சிமன்ற தேர்தல் அடுத்தவருடம் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும் அதனுடன் இணைந்த வகையில் வடக்கு மாகாண சபை தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மாகாண சபையின் பங்களிப்பையும் உள்வாங்கும் நோக்கிலேயே வடக்குத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலைமையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தின் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கடந்த முறைமைகளை போலன்றி இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து பிரதேசங்களிலும் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறப்போகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலிப் போராளிகளுக்கு தொழில் உபகரணங்கள் விநியோகம்

தொழில் பயிற்சியளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழில் உபகரணங்களை வழங்கினார்.

வெலிக்கந்த சேனபுரவிலுள்ள பாதுகாப்பான தங்குமிடவசதி மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொழில் பயிற்சியை முடித்த 250 போராளிகளுக்கு இதன்போது தொழில் உபகரணங்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் வழங்கினார்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் மற்றும் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி உட்பட படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுமிகளை திருமணம் செய்த இருவர் உட்பட அறுவர் கைது

குறைந்த வயதுடைய இரு சிறுமிகளை போலி ஆவணங்களைக் காட்டி திருமணம் செய்த இரு இளைஞர் உட்பட ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பண்டாரவலைப் பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளை 20 வயது இளைஞர்கள் இருவர் திருமணம் செய்துள்ளனர்.

இதற்கு உடைந்தையாக இருந்து சாட்சியாகக் கையொப்பமிட்ட இருவர் மற்றும் 19 வயது என போலி சத்தியக் கடதாசி வழங்கிய சமாதான நீதவான் உட்பட ஆறு பேரை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டுக் கொண்டு கொலை

தனமல்வில பொலிஸ்நிலைய காவலரணில் வைத்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தனமல்வில பொலிஸ் காவலரணில் கடைமை புரிந்த மற்றொறு பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியாலே இவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் இது ஒரு காதல் விவகாரமாக இருப்பதாகவும் ஆரம்பக் கட் விசாரணைகள் தெரிக்கின்றன.

மொனராகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் இடம் பெறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

முகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விவகாரம்; பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் ஆணைக்குழு தலைவர் 17இல் சந்திப்பு

ஆணைக்குழுவினர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்று நிலைமை ஆராய்வு
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளை (ரிஐடி) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அழைத்துப் பேசவிருப்பதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா நேற்று தினகரனுக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து தெரிவித்தார்.

இந்த இளைஞர், யுவதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிய விருப்பதாகவும் அவர் கூறினார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்திற்கு ஏற்ப தாம் அவர்களுக்கு சில சிபாரிசுகளை முன்வைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளை விடுவித்து அவர்கள் தங்களது குடும்ப உறவினர்களுடன் மீண்டும் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் அமர்வு முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலையில் நடைபெற்றது. இந்த அமர்வில் சாட்சியமளிக்க வென சுமார் நூறு பேரளவில் வந்திரு ந்தனர்.

இந்த அமர்வைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வாவும், ஆணைக்குழு உறுப்பினர்களும் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மக்கள் சிக்குண்டிருந்த பிரதேசத்தையும் பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நந்திக்கடல் களப்பையும், பிரபாகரனின் நிலக் கீழ் மாளிகை, நீச்சல் தடாகம் என்பவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக் கணக்கான வாகனங்கள் எரிந்து அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இதனைப் பார்த்து ஆணைக்குழுவின் தலைவர் அதிர்ச்சி அடைந்தார். “ஏன் இவற்றை அழித்தார்கள் என்பதை நானறியேன்.

இந்தச் சொத்துக்களுக்குரிய உரிமை யாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது அவசியம்” என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார்.

இக்குழுவினர் புலிகளால் கைப்பற் றப்பட்ட ஜோர்தான் நாட்டு பரா-3 என்ற கப்பலையும் பார்வையிட்டனர். அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்து அழிந்துள்ள மிதவையையும், படகுகளையும் இவர்கள் பார்த்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தலைமையிலான குழு நேற்று நியூயோர்க் சென்றடைவு






ஐக்கிய நாடுகள் சபையின் 65வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.

அங்கிருந்து அத்தூதுக்குழுவினர் மாநாடு நடைபெறும் நியூயோர்க் நகருக்குப் பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

உலகின் மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் முதலாவது ஐ. நா. சபை மாநாடு இதுவாகுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், இம்மாநாட்டிற்கு வருகை தரும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி உத்திகள் தொடர்பில் விளக்கவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்தது.

அத்துடன் மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொள்ளும் சர்வதேசத் தலைவர் களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன் பன்முகக் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிப்ப துடன் 1945ல் 56 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சபையில் 75வது நாடாக இலங்கை இணைந்து கொண்டது.

இம்முறை நியூயோர்க் நகரில் நடை பெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளல், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, மோதல்கள் நிறைவு பெற்றுள்ள நாடுகளின் அரசாங்கங்களைப் பலப்படுத்தல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படவுள்ளன.

மாநாட்டு அமர்வுகளின் போது இவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம் பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான இலங்கை தூதுக்குழுவில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஜோன் செனவிரத்ன, உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்து கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...