21 நவம்பர், 2009

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை


ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு

சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது
மேலும் இங்கே தொடர்க...
இன்றைய காலகட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒருமித்துச்செயற்படவேண்டுமென்றால்




இன்றைய காலகட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒருமித்துச் செயற்படவேண்டுமென்றால், முதலில் எங்களை நாங்களே ஏமாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மனம் ஈடுபடுகின்ற மாயங்களின் பயனாய் அது தன்மீதும், பிறர் மீதும் திணிக்கப் படுபவற்றையும் அவற்றின் விளைவுகளையும் குறிக்கும் ஒரு தன்மை. இதைத்தான் 'தன் ஏமாற்று' என்பார்கள்.
குறிப்பாக இப்போது உள்ள நெருக்கடி நிலையில் ஒவ்வொருவரும் தன்னை ஏமாற்றிக் கொள்வது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்வது என்றால்அதை வெறும் சொல்லளவில் பின் தொடர்ந்து பார்க்காமல் உள்நாட்டமாக, அடிப்படையாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். நாங்கள் எல்லோரும் மிக எளிதில் வார்த்தைகளுக்கும் எதிர் வார்த்தைகளுக்கும் திருப்திப் படுபவர்களாக இருக்கின்றோம்இதுதான் எங்கள் எல்லோரினதும் நடைமுறையாக உள்ளது.

தன்னை ஏமாற்றிக் கொள்வதில் முக்கிய அங்கமாகத் திகழ்வது ஏதோ ஒன்று நடக்கும் என்ற நப்பாசைதான். எடுத்துக்காட்டிற்கு, போர்களுக்கான விளக்கம் போரை நிறுத்தவில்லை என்பது எம் அனைவருக்கும் புரியும். பல ஆய்வாளர்களும் அனுபவம் கொண்டவர்களும் போரைப்பற்றியும்அதன் காரணி பற்றியும் விளக்கம் தந்துள்ளார்கள். ஆனாலும் போர் ஏதோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதுவும் முன் எப்போதையும்விட கூடிய அழிவு சக்தியுடன் தொடர்கின்றது. உண்மையில் அக்கறை கொண்டவர்கள் இந்த வார்த்தை விளக்கத்தைத் தாண்டி அப்பாற் சென்று எங்களுக்குள்ளே அடிப்படையான மாற்றத்தை நாடவேண்டும்எங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் அடிப்படையில் மீட்கும் வழி அது ஒன்றுதான்.

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஏமாற்றுவது பற்றி அறிய முற்படும்போது மேலெழுந்தவாரியான விளக்கங்களிலிருந்தும் பதில்களிலிருந்தும் எம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை எமது சிந்தனையுடனும் செயலுடனும் கவனிக்க வேண்டும்.
பிறரை எப்படிப் நாங்கள் பார்க்கின்றோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாளாந்தம் எப்படி செயற்படத் தொடங்குகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
தன்னை ஏமாற்றிக் கொள்வதன் அடிப்படையும் அதற்கான காரணமும் என்ன?
எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதை எம்மில் எத்தனைபேர் புரிந்திருக்கின்றோம்?

எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதை உணர்ந்தாற்றான் தன்னை ஏமாற்றிக் கொள்ளுதல் என்ன? அது எப்படி வருகிறது? என்பவை பற்றிச் சிந்திக்கலாம்.
தன்னை ஏமாற்றுதல் என்பது எங்களுக்கு ஒருவித உந்து சக்தியையும் ஆற்றலையும் செயற்திறனையும் அளித்து இதை மற்றையவர்கள் மீது திணிக்கவும் தூண்டுகிறது. ஆகவே தன்னை ஏமாற்றுதல் எம்மீது மட்டும் சுமத்தப்படுவதுடன் நில்லாது படிப்படியாக மற்றையவர்கள் மீதும் எம்மால் சுமத்தப் படுகிறது. இதுதான் ஒன்றன்மீது ஒன்று செயற்படும் தன் ஏமாற்று நடைமுறை. இதை நாங்கள் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாகவும் குறிக்கோள் உடனும் நேர்த்தியாகவும் சிந்திக்க வல்லவர்கள் என நினைத்துச் செய்கின்றோம். ஆனாலும் நடைமுறையில் இச்சிந்தனையால் நாமே நம்மிடம் ஏமாந்துள்ளோம் என்பதை உணருவதில்லை.

எம் சிந்தனை நடைமுறையில் எப்படி ஏமாந்திருக்கிறது என்றால், எங்களுடைய சிந்தனையே தேடுகின்ற அதாவது நியாயத்தைத் தேடுகின்ற ஒன்று. எங்கள் நடவடிக்கைகளை சரி என வழிப்படுத்துவது. மற்றையவர்களின் நடவடிக்கைகளில் பிழை பிடிப்பது. இப்படிப் பல எங்களுடைய சிந்தனை என்பது தன்னை ஏமாற்றிக் கொள்வதுதானே?
ஆதாவது ஒன்றை விரும்புகின்ற அந்தக் காரணத்தினாலேயே எளிதில் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையைக் கொண்டு வருகின்றோம், அல்லது தோற்றவிக்கின்றோம். இது எங்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல்தானே.
ஓரு பிரச்சனையை எப்படி அறிகின்றோம், அதாவது என்ன உள் நோக்கத்தோடு, என்ன உந்துதலோடு, எந்த ஆசையோடு என்பதுதான் முக்கியம்.

தேடுகின்ற நாங்கள் ஒவ்வொருவரும் இந்த ஏமாற்று வேலையை எங்கள் மீது திணித்துக் கொள்ளுகின்றோம். இதை நாங்களே செய்கின்றோம், வேறு யாரும் இதைத் திணிக்க முடியாது. நாங்களே எங்களுக்குள் செய்கின்றோம்.
நாங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக ஏமாற்றுதலைத் தோற்றுவித்து பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றோம்; இதுதான் நடைமுறை. நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏதோ ஒரு விதத்தில் குறை கூறுகின்றோம். ஒவ்வொருவரும் மற்றையவர்களுடன் போட்டி போடுகின்றோம். இந்த மொத்த விளையாட்டுப் பந்தயம் எங்கள் எல்லோருக்கம் தெரியும்; இது ஒரு அசாதாரண தன் ஏமாற்று நடைமுறை.

நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும்வரை ஒற்றுமை இருக்க முடியாது. இதனாற்றான் ஒற்றுமை என்றால் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
மேலும் எங்களுக்கு எப்படி ஒத்துழைப்பது என்பது புரியாது. எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் நாங்கள் தோற்றுவித்த ஒரு முடிவிற்காக சேர்ந்து செயற்பட முயல்கின்றோம் என்பதுதான்.
இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் அல்லது பல குழுக்கள் மத்தியில் சிந்தனை ஏற்படுத்திய பொதுவான குறிக்கோள் இல்லாத போதுதான் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். இருவரும் எந்த ஒன்றாகவும் ஆகவேண்டும் என்ற குறிக்கோளும் இல்லாத போதுதான் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். இதை உணர்வதுதான் எங்கள் ஒவ்வொருவருக்கம் உரிய தேடலாகும்.
மேலும் நீங்களும் நாங்களும் ஏதோ ஒன்றாக விரும்பினால் பின்னர் நம்பிக்கைகளும் மற்றையவைகளும் அவசியமாகின்றது. அதாவது நாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை. இலக்குத் தேவைப் படுகின்றது.
ஆனால் உண்மையாக ஒத்துழைப்பு ஏற்பட வேண்டுமானால் எங்களிடத்தில் எந்தவிதத் தன் ஏமாற்றும் இல்லாமல் அறிவு பொய்த் தோற்றம் ஆகிய தடைகளும் இல்லாமல் முன் அனுபவக் கருத்துக்களும் இல்லாமல் இருந்தாற்றான் உண்மையான ஒத்துழைப்பு ஏற்படும்.

ஆதே நேரத்தில் நீங்களும் நாங்களும் சிந்தித்து செயல்படுத்தி திட்டமிட்டு விளைவையும் பயனையும் தீர்மானித்து ஒன்றாகக் கூடி உழைத்தோமானால் அதில் உள்ள நடைமுறை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
ஆதாவது அந்த நடைமுறை எங்களுடைய சிந்தனைகளும் அறிவாற்றல் படைத்த மனங்களும் சந்திக்கின்றது என்பது தெளிவு. ஆனால் உணர்ச்சிபூர்வமாக மொத்த உள்ளமைப்பும் அதை எதிர்க்கின்றது. இதுதான் தன்னை ஏமாற்றுதலைக் கொண்டு வருகின்றது. இதுதான் எங்களுக்கிடையில் பிரச்சனையை உருவாக்குகின்றது. இது எங்கள் அன்றாட நடைமுறையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏப்படி என்றால் நீங்களும் நாங்களும் அறிவுபூர்வமாக ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய இணங்குகின்றோம். ஆனால் உள் மனதின் ஆழ்நிலையில் நீங்களும் நாங்களும் முரண்படுகிறோம். எங்களுடைய திருப்திக்கு ஏற்றபடி நாங்கள் ஒரு பயனை வேண்டுகின்றோம். நாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றோம். எங்களுடைய தலைமைத்துவத்தை முன் எடுக்கின்றோம். உங்களுடன் சேர்ந்து உழைப்பதாகச் சொன்னாலும் இதுதான் மன ஆழத்தின் நிலைமை?

ஆனாலும் நாங்கள் இருவரும்தான் அந்தத் திட்டத்தைத் தோற்றுவித்தவர்கள். ஒருவரை ஒருவர் எதிர்க்கின்ற நேரம் வெளிப்புறத்தில் அத்திட்டத்தை ஒத்துக்கொண்ட போதிலும்கூட நாம் எதிர்க்கவே செய்கின்றோம்; இதுதான் எங்கள் எல்லோருடைய நடைமுறையும்கூட. ஏன் எல்லா உலகத் தலைவர்களினதும் நடைமுறையுங்கூட; இதுதான் தன் ஏமாற்று நிலை.
எடுத்துக்காட்டாக எல்லா மதங்களும்; சகோதரத்துவம், ஒரே கடவுள், ஒற்றுமை என்று எல்லாம் பேசுகின்றன. ஆனால் அந்த அந்த மதக்காரர்கள் அவரவர் நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். அதே வேளை கொள்கையாகவும் அறிவாற்றலாகவும் இது இப்படித்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறோம். உள்நிலையில் நாம் ஒருத்தருக்கு ஒருவர் எதிரியாக உள்ளோம்.

இப்படித்தான் நாங்கள், நீங்கள் ஏன் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதாக இருந்தாலும், உள் நடைமுறை எங்களுக்குள் இப்படித்தான் இருக்கின்றது.
ஆகவே இந்தத் தடைகளை அதாவது தன் ஏமாற்ற வேலையாக உள்ள ஒருவித மன ஆற்றலை கொடுக்கக் கூடிய இந்தத் தடைகளை உடைக்காவிட்டால் எங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒத்துழைப்பே இருக்க முடியாது. இதை நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் சிந்திக்க வேண்டும்.
ஓரு கூட்டத்தோடு ஒரு குறிப்பிட்ட கருத்தோடு ஒரு கொள்கையோடு ஒன்றுபடுத்திக் கொள்வது இருக்கும்வரை ஒத்துழைப்பை ஒருபோதும் எங்களால் கொண்டு வர முடியாது.

நாங்கள் ஒவ்வொருவரும் முட்கம்பிக்குள் உள்ள மக்களின் பிரச்சைனைகளைத் தீர்ப்பதற்கும் உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கம் கூட ஒன்றாகத் தீர்மானிக்க முடியவில்லை. பிரச்சனையைத் தீர்க்கும் கொள்கை பற்றித்தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அதாவது முட்கம்பிக்கள் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்ற நினைக்கின்றோம். ஆனாலும் எப்படிக் காப்பாற்றவது என்ற கொள்கை பற்றித்தான் அதிகம் கவலைப் படுகின்றோம..

மக்களின் பட்டினிப் பிரச்சனைக்குள்ள முக்கியத்துவத்தை விட அதை எப்படித் தீர்ப்பது என்பதுதான் எல்லோருக்கும் கூடிய கவலை அளிக்கிறது. இது ஒரு அப்பட்டமான தன் ஏமாற்றுச் செயல் என்பதை நாங்கள் உணர வேண்டும்.
மேலும் சில கடந்த கால, கடந்து வந்த பாதைகளில் இருந்து சில நபர்பற்றி சில குழு பற்றி பல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றோம். அந்த அனுபவத்தோடு ஒட்டிக்கொண்டும் இருக்கின்றோம், ஆனால் அனுபவம் பெற்றதின் மொத்த நடைமுறையினுள்ளும் சென்று பார்ப்பதில்லை. என்னில் அனுபவம் பெற்றேன், அது போதும், அதை நாங்கள் இறுகப் பற்றிக்கொண்டு இருக்கின்றோம். அதன்மூலம் அந்த அனுபவங்களைக் கொண்டு எங்களையே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். இதனாற்றான் புதிய தளத்தில் புதிய பிரச்சனையைப் புதிதாகப் பார்க்க முடியவில்லை. அப்படியாயின் எப்படி ஒன்றாக வேலை செய்வது?

நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவித நம்பிக்கையோடும் கடந்த கால அனுபவங்களோடும், ஒரு பொது வேலைத் திட்டத்திற்காக ஒன்று படுத்திக் கொண்டுள்ளோம். இதனால் எங்களுடைய மனம் இதற்குள் கட்டுப்பட்டு இருப்பதால் பிரச்சனையின் ஆழத்திற்கு போய்ப் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றோம். இதனால் நாங்கள் மீண்டும் தனியே ஒதுங்கி நம்முடைய குறிப்பிட்டவர்கள் நம்பிக்கைகள் அனுபவங்கள் ஆகியவற்றில் இருக்க விரும்புகின்றோம். அதாவது எங்களையே நாங்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் சிந்தித்து இந்த தன்னை ஏமாற்றும் செயலிலிருந்து விடுபட்டு பழைய அனுபவங்கள், முடிவுகள், கருத்துக்களை விட்டு விட்டு ஒரு பொதுவான பிரச்சனையை ஒட்டிய ஓட்டத்திற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏனெனில் பிரச்சனை எப்பொழுதும் புதியது. ஆகவே எல்லோரும் பிரச்சனையை ஒட்டிய தொடர்ந்த ஓட்டம் ஓடவேண்டிய கால கட்டம். இனியும் தன் ஏமாற்று வேலையிலிருந்து விடுபட்டு எங்கள் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சனை ஒன்றுதான் அதை ஒட்டி தொடர்ந்தும் ஓட்டம் ஒன்றின் மூலம் ஒன்றாக நாங்கள் எல்லோரும் வேலை செய்வோம்.

நன்றி
ஞானம்
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்களை ஜனவரிக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டம்

வடக்கு மக்கள் குறித்து பசில் இன்று முக்கிய அறிவிப்பு


வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுள் பெரும்பான்மையானோரை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்திவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்னமும் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 328 பேர் மட்டுமே மீளக்குடியமர்த் தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வவுனியாவில் தற்போது 1, 27, 495 பேர் மட்டுமே மீளக் குடியமர காத்திருப்பதாகக் கூறினார். கடந்த வாரம் 132, 748 பேர் அங்கு இரு ந்ததாகவும் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இன்று ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய வட பகுதிக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துப் பேசுவதுடன், வடக்கு மக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பொ ன்றைச் செய்வாரென்று அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

வடபகுதி மக்கள் இது வரை பெற்றிராத விடய ங்கள் தொடர்பாக இந்த அறிவிப்பு வெளி யாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

‘வவுனியாவிலிருந்து மேலும் 5000 பேர் மீளக்குடியமர ஆயத்தமாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 2034 பேரும், மன்னாரில் 970 பேரும், திருகோணமலையில் 2762 பேரும் மீளக்குடியமரவும் காத்துள்ளனர். வைத்தியசாலைகளில் 3067 பேர் உள்ளனர். அரசாங்கத்தின் ஐந்தாம் கட்ட மீள்குடியேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் பாராட்டியுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் அறிவிப்புடன் சர்வதேசத்திற்கும் மேலும் தெளிவாக நாம் எமது நிலையை எடுத்துரைக்க முடியும். மீள்குடியேற்றம் தாமதமாகுவதாகக் கூறியவர்கள் இன்று பாராட்டுவது நாட்டுக்குக் கெளரவமாகும். நாளை அல்லது மறுதினம் மீள்குடியேற்றம் 50% ஐயும் தாண்டிவிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில், இடர்முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ன, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.



மேலும் இங்கே தொடர்க...

20 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவும் ராஜினாமா




முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென தாம் வகித்து வந்த பதவியை அனோமா பொன்சேகா ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற படைவீரர்களது குழந்தைகள் பராமரிப்பு நிதியத்தில் அனோமா வகித்து வந்த பதவி நீக்கப்பட்டதன் காரணமாகவே, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சி : அரசு மறுப்பு


கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுணுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

"சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.

அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
வடக்கு-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட மாணவர் தே.அ.அட்டை பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல்கள்


க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு பாடசாலை ஊடாக தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள் தத்தமது பாடசாலை ஊடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள போதிலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் மீளவும் பாடசாலைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகிழக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் கொண்டுள்ள மாணவர்கள் அதனை குறித்தப் பிரதேசத்தின் கிராமசேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தி அக்கடிதத்தையும் அதனுடன் இணைத்து அனுப்புமாறு கோரப்படுகின்றனர்.

அதேவேளை பாடசாலையூடாக, விண்ணப்பிக்கும் மாணவர் ஒருவர் குறித்த பாடசாலையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கல்வி கற்கும் பட்சத்தில் பாடசாலை அதிபரின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பித்து தமக்குரிய தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியுமென இது தொடர்பான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை கவனத்திற் கொள்ளப்படாது குறித்த விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

க.பொ.த.(சா/த) பரீட்சை நெருங்கிவரும் நிலையில், எவ்வாறு வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்குச் சென்று கிராமசேவகர்களிடம் தமது நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதென மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பலர் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்திலிருந்தும் இடம்பெயர்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கொழும்பிலேயே வசித்து வருவதாகவும், இந்நிலையில் மீண்டும் வட பகுதிக்குச் சென்று தமது பகுதி கிராமசேவகர்களிடம் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வது கடினமான காரியமெனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, சுற்றறிக்கைக்கு ஏற்ப பாடசாலை அதிபர்கள் உறுதி செய்யும் பட்சத்தில் தமக்கு தேசிய அடையாள அட்டையை வழங்க ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுகின்றனர்.

அதேவேளை, தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தனது பதிவை உறுதிப்படுத்தவேண்டும். வெளிமாவட்டங்களில் தற்காலிமாக வாழ்வோர் அம்மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பதாயின் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள கிராம சேவகரூடாக, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் உறுதிப்படுத்தியதன் பின்னரே அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
அரசியலமைப்பில் மாற்றம் அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு



நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர் ச்சி உட்பட நாட்டின் முன்னுள்ள ஏனைய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அரசியலமைப்பிலும் நடைமுறை அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தகுதியற்றவர்களின் அரசியல் பிரவேசத்தினால் இலங்கை அரசியலில் தகுதியுடையவர்கள் கூட தகுதியற்றவர்களாகவே தெரிகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுதிய எதிர்கால சவால்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வாறுகாராம விஹாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது. இக்காலப் பகுதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை பொருளாதாரம், சுகாதாரம் உட்பட ஏனைய துறைகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இலங்கை ஏனைய நாடுகளிடையே ஒப்பிடுகையில் பின்தள்ளப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்ற திட்டக் கொள்கை சரியாக அமைத்து செயற்படுத்தப்படாமையால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, நல்லாட்சிப் போன்றவை சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறினாலும் அந்த நாடுகளின் தேசிய கொள்கைகளில் என்றும் மாற்றம் ஏற்படுவதில்லை.

இவ்வாறானதொரு மாற்றமடையாத தேசியக் கொள்கை ஒன்று இலங்கைக்கு தற்போது தேவை. இலங்கையில் நல்லாட்சியை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும். ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை எவ்வாறு அடைவது என்பது தொடர்பாக புதிய கொள்கைகளை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகளையே தற்போதைய அவசர தேவையாக கொண்டு பேசப்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகளை அமைக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...
ஐ.தே.மு. பொதுவேட்பாளர் பட்டியலில் ஜெனரல் சரத் உட்பட 9 பேரின் பெயர்கள் திகதியை அறிவித்தால் நாம் வேட்பாளரை அறிவிப்போம் என்கிறார் மங்கள



இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட 9 பேரின் பெயர்கள் இணைக்கப்பட்ட பொது வேட்பாளர் பட்டியல் ஐக்கிய தேசிய முன்னணியால் ஆராயப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகவோ அல்லது இராணுவ வீரராகவோ அல்லது சீருடை களைந்த பொது மகனாகவோ அதுவும் ஜனநாயக ரீதியில் மக்களின் ஆதரவுடனே அரசியலுக்குள் வருவதற்கு முயற்சிக்கின்றார். அவர் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.

ராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மங்கள எம்.பி. இங்கு மேலும் கூறுகையில் இராணுவத்தினரை தேர்தலில் அறிமுகப்படுத்தியதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுகம் தான். கடந்த காலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இராணுவத்தைச் சேர்ந்தோரை களத்தில் நிறுத்தியது அரசாங்கம். இதற்கு நான் அன்றும் இன்றும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன்.

அந்த வகையில் ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தமட்டில் தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் சீருடையை களைந்துவிட்டே மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்குள் நுழைவதற்கு முயற்சிக்கின்றார்.எதிர்க்கட்சிகளின் பொதுகூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளர் பட்டியலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற விடயத்தை சுதந்திரக்கட்சி மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறிய ஜனாதிபதி அதனை இன்று வரையில் அறிவிக்கவில்லை.அந்தளவுக்கு அச்சம் அவரை ஆட்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு எந்தவிதமான நெருக்குதலும் இல்லை. எமக்குப் பயமும் இல்லை பீதியும் இல்லை.எனவே ஜனாதிபதி தேர்தலைத்தான் முதலில் நடத்துவது என்று ஜனாதிபதி மஹிந்த நினைப்பாரேயானால் அதற்கான திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம். எமது பொதுவேட்பாளர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பவராகவும் வடக்கிலே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பவராகவுமே இருப்பார்.

1000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் உருவம் பொறித்த ஆயிரம் ரூபா நாணயத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றாகும். அரச தலைவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னரே அவரது உருவம் பொறித்த முத்திரைகள் கூட வெளியிட முடியும். எஸ். டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மரணம் சம்பவித்து பல வருடங்களின் பின்னரே அவரது முகம் பதித்த நாணயத்தாள் வெளியிடப்பட்டது ஆனால் தற்போது நடைபெற்றிருப்பது அப்பட்டமான தேர்தல் பிரசாரமாகும்.

ஆணையாளருக்கு கடிதம்

கடந்த காலங்களில் அரச சொத்துக்கள், அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரத்துக்காக பாவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மத்திய வங்கியை பாவித்துள்ளார். இது பாரதூரமான விடயமாகும். எனவே இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவிருக்கின்றேன்.ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரையில் இந்த நாணயத்தாள் பாவனையில் விடப்படக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம். இவ்வாறு முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரக்கட்சி மாநாட்டை காட்டி எம்மை அச்சுறுத்துவதற்கும் அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கும் ஜனாதிபதியினால் தீட்டப்பட்ட திட்டம் நிறைவேறவில்லை என்றதும் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை பல்வேறு கோணங்களில் முன்னெடுத்து வருகிறார் எதற்கும் நாம் அஞ்சிவிடப்போவதில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

180 நாட்கள் தொடர் பணி புரிந்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

தற்காலிக, சமயாசமய, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவோர் தகுதி

25,000 பேர் நன்மையடைவர்

180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ள தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு அரசாங்க துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்கள் அரச மற்றும் மாகாண பொதுச் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்படுவார்கள்.

அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 25 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாது உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி திட்டமிடல் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (19) கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இது குறித்து மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவற்றில் சில ஆட்சேர்ப்புகள் திறைசேரியின் முழுமை யான அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே தற்காலிக சமயாசமய, மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும்.

இதன்படி, 2009 ஒக்டோபர் 31ம் திகதியாகும்போது தொடர்ச்சியாக 180 நாட்கள் பணிபுரிந்த, குறித்த பதவிக்குரிய தகைமைகளைக் கொண்ட 45 வயதுக்கு குறைவான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும். எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வெற்றி டங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு நியமனம் வழங்கி, மேலதிகமாக உள்ள ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் பணிபுரியும் தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப் படையிலான ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான அதிகாரம் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, இனிமேல் திரைசேறியின் உரிய அனுமதியின்றி தற்காலிக, சமயாசமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழி யர்களை நியமிப்பதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நெருங்குவதால் அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர் களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவோ அல்லது கொடுப்பனவுகளை அதிக ரிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசாங்க அத்தியாவசிய தேவைகளுக்காக சேர்க்கப் பட்ட ஊழியர்களுக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது வழமையானது. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். (ரு)



மேலும் இங்கே தொடர்க...