7 மே, 2011

ரொபர்ட் பிளேக் தமிழர்களுக்கு மீண்டும் தவறாக உபதேசம் செய்யக்கூடாது மனோ கணேசன்



போர் முடிவடைந்தவுடன் உடனடியாகவே அரசாங்கம் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்ற பிரசாரத்தை அப்போதைய அமெரிக்க தூதர் ரொபர்ட் பிளேக் முன்னெடுத்தார். ஆனால் இன்று போர் முடிந்து இரண்டு வருடங்களாகி, இத்தனை அழிவுகளுக்கு பின்னரும்கூட தமிழ் மக்களால் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக் கூடக்காண முடியவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜமமு தலமையகத்தில் நடைபெற்ற வாராந்த கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,



போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் பிளேக் 13வது திருத்தச் சட்டம் பற்றியே உபதேசித்து வந்தார். 13வது திருத்தத்திற்கு அப்பால் அரசாங்கம் செல்லும் என்ற ஒரு தோற்றத்தையும் அவர் ஏற்படுத்தியிருந்தார்.



அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. இந்த நிலைப்பாட்டை சமாளிப்பதற்காகவே பிளேக் இத்தகைய கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால் இன்று இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும்கூட இந்நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக்கூட தமிழ் பேசும் மக்களால் காண முடியவில்லை.



போரின்போது ஐநா சபை பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதில் தீர்மானகரமாகச் செயலாற்றவில்லை என்பதை இன்று உலகம் அறிந்துகொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மூலம் இறுதி நேரத்தில் போரை நிறுத்துவது போன்ற சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை காலம் கடந்த செயலாகும். அவ்வேளையில் போர் நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தது. அது சாத்தியமாகி இருந்தாலும்கூட அதன் மூலம் வன்னி மக்களைப் பாதுகாத்திருக்க முடியாது. வேண்டுமென்றால், எஞ்சியிருந்த சில விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். பொது மக்களைப் பாதுகாப்பதற்கான காலம் அப்போது கடந்திருந்தது.



போர் காலத்தில் நாங்கள் மக்கள் கண்காணிப்புக்குழுவை அமைத்து செயற்பட்டோம். விக்ரமபாகு, சிறிதுங்க ஆகியோருடன் இணைந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடாத்தினோம். அதன்போது அமெரிக்காவின் சுதந்திரக் காவலர் மனித உரிமை விருது எனக்கு அளிக்கப்பட்டது. அப்போது தூதுவராக இருந்த பிளேக் இதற்குக் காரணமாக இருந்தார். இந்த விருது எங்கள் செயற்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் இதன் பிறகுதான் எனக்கு பெருமளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன.



இவ்வேளையில் அமெரிக்கா யுத்தத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கையை கடைபிடித்தது. ஆனாலும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் தாங்கள் அக்கறைகொண்டுள்ளோம் என்று காட்டுவதற்காகவே இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதாக நான் தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்த விருது வழங்கும் நிகழ்வை பகிரங்கமாக நடத்துவதற்கு நான் உடன்படவில்லை.



போரினால் மரணமடைந்த அப்பாவி மக்களின் உயிர்களை மீண்டும் ஒருபோதும் மீட்டு கொண்டுவர முடியாது. எனவே போருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களுக்கு இன்று இலங்கைத் தமிழ் மக்கள்; குறித்த தார்மீக பொறுப்புணர்வு இருக்கின்றது. இவர்களுக்கு இன்று ஒரேயொரு சாத்தியமான வழி மட்டுமே இருக்கின்றது. அது தான் ஒரு நியாயமான அரசியல் தீர்வு என்பதாகும். இது தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கை அரசாங்கத்துடன் தீர்மானகரமான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.



ஐக்கிய அமெரிக்காவுக்கான துணை ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் தனது முன்னைய அரசியல் தீர்வு உபதேசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் இதுவாகும். இதை நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் தமிழர்களுக்கு ரொபர்ட் பிளேக்கும், அவரது அரசாங்கமும் உண்மைக்கு புறம்பான உபதேசங்களை செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக