5 ஜனவரி, 2011

யாழ். குடாவில் இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா






யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (04) பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புப் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

யாழ். குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த துரித சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். சபாநாயகரின் அனுமதியுடன் விசேட உரையை நிகழ்த்திய அமைச்சர்,இந்த நாட்டில் ஒரு யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது.

யுத்தத்தின் வடுக்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் துயரங்களில் இருந்தும் எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கி ன்றார்கள். அதற்காக நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ வுக்கும் படைத் தரப்பினரு க்கும் பல தடவைகள் நன்றி தெரிவித்து வந்திருக்கின்றேன்.

ஆனாலும் இனி இங்கு யுத்தமும் இல்லை, இரத்தம் சிந்தும் நிலையும் இல்லை என்ற நம்பிக்கையோடு காத்திருந்த எமது மக்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படும் படியாக சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் குறிப்பாக யாழ்.

குடாநாட்டில் ஆங்காங்கே சில படுகொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் எமது மக்கள் மறுபடியும் ஓர் அச்சம் தரும் சூழலுக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபடியும் எமது வாழ்விடங்கள் இரத்தம் சிந்தும் பூமியாக மாறிவிடப்போகின்றன எனும் வதந்திகளும் ஆங்காங்கே திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றன.

அப்பாவி மக்கள் எதை நம்புவது? எதை நம்பாமல் இருப்பது என்று திகைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது எமது மக்கள் சமூகத்தின் ஒரு மனிதாபிமான பிரச்சினை. அதற்காகவே நான் இந்த விடயத்தை இந்தச் சபையின் கவனத்திற்கு எடுக்க விரும்புகின்றேன்.

எமக்கு வாக்களித்த மக்கள் என்பதற்கா கவோ, அன்றி எமது அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி உருவாகிவிடும் என்பதற்காகவோ நான் இதைத் தெரிவிக்க வரவில்லை. அது அடுத்த பட்சமான பிரச்சினை.

சகல மக்களும் இங்கு அச்சமின்றி ஒரு ஜனநாயக சூழலில் சம உரிமையோடு முகமுயர்த்தி வாழ வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும்.

மக்களின் அவலங்களை வைத்து அரசியல் நடத்துவதற்கு நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. ஆனால் இதை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்குக்கூட முயற்சிக்கலாம்.

ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் அல்ல என்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.

கடந்த காலங்களில் உருவாகிவந்த பல நல்ல சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் இங்கு சரியாகப் பாதுகாக்கப்படவில்லை. சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

இன்று மாறி வந்திருக்கும் சூழல் என்பது வரலாற்றில் ஒரு போதும் நடந்திருக்காத மாற்றமாகும். கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு இன்று கிடைத்திருக்கும் இந்த சூழலை பாதுகாக்க வேண்டும். இதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பானது சகலருக்கும் உண்டு.

யாழ்ப்பாணம் சங்கானையில் நடந்த குருக்கள் வீட்டு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்த பாதுகாப்புத் தரப்பினர் அதேபோன்று யாழ். குடாநாட்டில் நடந்து முடிந்த அனைத்து சம்பவங்களுக்குமான சூத்திரதாரிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகின்றேன். அவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இது தவிர கடத்திச் செல்லப்பட்டவர்கள் தமது உயிர் மற்றும் உடல் சேதங்களின்றி வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் என்று யார் மீதாவது சந்தேகங்கள் உருவாகும் பட்சத்தில் ஆதாரங்களோடு அவர்களைக் கைது செய்யவோ அல்லது நீதி விசாரணைக்கு உட்படுத்தவோ இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நீதித் துறையினருக்கும் சட்டரீதியிலான அதிகாரம் உண்டு.

அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி நடந்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும் நடந்து முடிந்தவற்றுக்கான நீதி விசாரணைகளை மேற்கொள்ளவும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, இந்த மனிதாபிமான பிரச்சினையை ஒரு மக்கள் சமூகத்தின் சார்பாகவும், இந்த நாட்டை வன்முறைகள் அற்ற ஒரு ஜனநாயக பூமியாக உயர்த்த வேண்டும் என்று விரும்பி உழைக்கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களில் ஒருவன் என்ற வகையிலும் இந்த சபையின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இதேவேளை, மக்கள் மத்தியில் உருவாகி வரும் பதற்றங்களை மேலும் தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை அல்லது அறிக்கைகளை வெளியிட்டு எமது மக்களை மேலும் அச்சம் தரும் சூழலுக்குள் தள்ளிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ஊடகங்கள் இது குறித்த விடயங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்காமல் பொறுப்புணர்ச்சி யோடு செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த சபையில் கேட்டுக்கொள்கின்றேன். உண்மைகளை மட்டும் வெளியில் கொண்டு வருவதற்கு யாருக்கும் சுதந்திரம் உண்டு என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதேவேளையில், அச்சத்தில் உறைந்து போயிருக்கும் சகல மக்களுக்கும் நம்பிக்கை தெரிவித்து நல்லதே நடக்கும், நடக்க வைப்போம், நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு உறுதியளிக்கின்றேன்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசும் போது,

யாழ். குடாநாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிய அனைத்துக் கட்சிக்குழுவொன்றை அனுப்ப வேண்டும் என்றும் சபையில் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக