20 செப்டம்பர், 2010

வேலைக்கார பெண்ணுக்கு சூடு:அக்கிரம மலேசிய தம்பதி கைது

கோலாலம்பூர்:வேலைக்காரப் பெண்ணிற்கு சூடு போட்டு சித்ரவதை செய்த மலேசிய தம்பதியை, போலீசார் கைது செய்துள்ளனர்.மலேசியாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்காக வருகின்றனர். அவர்கள் அங்கு, வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். அவர்களை முதலாளிகள் மோசமான முறையில் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எனினும், தொழிலாளர்கள் வேலைக்கு வருவது குறைந்தபாடில்லை.மலேசியாவில் உள்ள ஒரு கான்ட்ராக்டர், தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டு, தன் வீட்டில் வேலை செய்து வந்த, இந்தோனேசியாவைச் சேர்ந்த வேலைக்காரப் பெண்ணுக்கு, இரும்புக் கம்பியால் சூடு போட்டு சித்ரவதை செய்துள்ளார்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி, சாலையோரத்தில் விட்டுவிட்டனர்.பொதுமக்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மலேசிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்திய அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக