29 ஜூன், 2010

இந்திய - இலங்கை கடற்படைத்துறையை மேம்படுத்தத் திட்டம் : நிர்மல் வர்மா

இந்திய - இலங்கை கடற்படைத்துறையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்று இந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்திய கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் காங்கேசன்துறை துறைமுகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்ப கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்திய கடற்படையினர் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோல இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் பயிற்சி பாடத்திட்டங்களை அதிகரித்து கொள்வது தொடர்பிலும் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பிலான பாடத்திட்டம் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு துறைகத்திற்கும் டியுட் கொரீன் துறைமுகத்திற்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரத்திற்கு இடையில் படகு சேவையை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது." இவ்வாறி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா கருத்து தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் இந்தியா - இலங்கை இடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதேபோன்று, இந்திய - இலங்கை கடற்படைத்துறைகளில் விசேடமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு ஏற்றவகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக