21 ஏப்ரல், 2010

பிரபாவின் தாயாரை திருப்பி அனுப்பியது திமுகவுக்கு தெரியாதென்பது நகைப்புக்குரியது : அத்வானி



விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பிய விடயம் திமுகவுக்குத் தெரியாது என டீ. ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்புக்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்திய எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக் சபாவில் கண்டித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்த கருத்தை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

விஜயகாந்த் கோரிக்கை

பார்வதி அம்மாள் தமிழ்நாட்டுக்கு வருவதைத் தடுத்த தடை ஆணை பட்டியலை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நீக்க முதல்வர் கருணாநிதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

"பார்வதி அம்மாளை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத்தகவல் தெரிந்தும் மெளனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்?

2003ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003ஆம் ஆண்டு பட்டியலை 10 ஆண்டுகள் கழித்துத் தான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை.

தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் இந்தத் தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்த பட்டியலை ரத்து செய்திருக்கலாம்.

எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற அடிப்படையிலும், தானே முன் வந்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த அந்த தடை ஆணை பட்டியலை அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக