2 பிப்ரவரி, 2010




பொது வாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித்தது இலங்கை




கொழும்பு,​​ பிப்.​ 1:​ ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது.

பிரிட்டனில் கடந்த வாரம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.​ இதில் 64,692 பேர் பங்கேற்றனர்.​ இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும்,​​ 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.​ 251 பேர் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கையின் மூத்த அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா திங்கள்கிழமை கூறியதாவது:

இலங்கை, ​​ பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ இறையாண்மை மிக்க நாடு இலங்கை.​ மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கு ஆட்சி நடைபெறுகிறது.

இது போன்ற வாக்கெடுப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.​ எனவே,​​ இந்த வாக்கெடுப்பை நிராகரிக்கிறோம் என்றார்.

இலங்கை:​ 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு




கொழும்பு,​​ பிப்.​ 1:​ இலங்கையில் 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 3 மேஜர் ஜெனரல்கள்,​​ 2 பிரிகேடியர்களும் அடங்குவர்.

இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும்,​​ அதிபர் தேர்தலின்போது அரசியலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர,​​ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும்,​​ முன்னாள் ராணுவத் தளபதியுமான பொன்சேகாவுக்கு ஆதரவாகக் கருதப்பட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகளையும் அதிபர் ராஜபட்ச இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.







பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி: பொன்சேகா மீண்டும் தீவிரமாகிறார்





கொழும்பு: "விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும்' என, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. இதனால், பொன்சேகா மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறார்.


இலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் கூறியதாவது: அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. இது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு உற்சாகம் தரும் தகவல். எனவே, விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு சம்பந்தன் கூறினார்.


எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுல் ஹக்கீம் கூறுகையில், "தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் கூட்டணி தொடரும். பொன்சேகாவை ஆதரிக்கும் விஷயத்திலும் மாற்றம் இல்லை. கூட்டணியை தொடர்வது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர்களிடமும் பேசி வருகிறோம்' என்றார்.




சிகரெட் விற்பனையை குறைக்க பிரிட்டன் முடிவு



லண்டன்: பிரிட்டனில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது இடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவால் தற்போது மூன்றரை லட்சம் பேர் புகைப்பதை விட்டு விட்டனர்.


தற்போது, பிரிட்டனில் 21 சதவீதம் பேர் புகைத்து வருகின்றனர். வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆன்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். "சிகரெட் குறித்த கவர்ச்சி விளம்பரங்களை தடை செய்வது, சிகரெட் மீது அச்சிடப்படும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் வாசகங்களை தடை செய்வது, காசு போட்டால் சிகரெட் கொடுக்கும் இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, அமைச்சர் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். "அரசின் இந்த கடுமையான நடைமுறை தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது' என, சிகரெட் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக