4 மே, 2010

140 பயங்கரவாதிகள் இந்தியா நுழைந்தனர்; இலங்கை மீனவ படகு மூலம் வந்தனரா ?





புதுடில்லி: இந்தியாவிற்குள் மேற்கு கடல் பகுதி வழியாக 140 அல்குவைதா மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதாக உளவு துறையை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் வாரியாக பிரிந்து சென்று சதித்செயலில் ஈடுபடக்கூடும் என அஞ்சப்படுகிறது.



பல மாநிலங்களுக்கு குழுவாக பிரிந்து சென்றனர் : அசாம் மாநில போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி 140 பேர் இந்தியாவின் மேற்கு பகுதி கடல் வழியாக வந்திருக்கின்றனர் என்றும் , மகாராஷ்டிரா, குஜராத்தில் இறங்கி அங்கிருந்து பல குழுக்ககளாக அதாவது 30 பேர் ராஜாஸ்தானுக்கும், உ . பி., க்கு 14 பேரும் , 15 முதல் 20 பேர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்திற்கும், மகாராஷ்டிராவுக்கு 12 பேரும், டில்லி - அரியானாவுக்கு 5 பேரும், இதில் இருந்த ஏனைய 40 பேர் தென் மாநிலங்களுக்கும் பிரிந்து சென்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் இலங்கை மீனவ படகு மூலம் வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு தொடர்பு கொண்ட பயங்கரவாதிகளின் உரையாடல் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் தெரியவருகிறது.



அமெரிக்க எச்சரிக்கைக்கு காரணம் : இந்த உறுதிப்படுத்தப்படாத சந்தேக தகவல்கள் மூலம் தான் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் உஷாராக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது என்றும், இதனை கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவும் 2 முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களாக டில்லியில் கூடுதல் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கும், இது தான் காரணம் என பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. கடல் வழி பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்ற பாதுகாப்பு துறை வட்டாரமே ஒத்துக்கொண்டுள்ளது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் வழியாகத்தான் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆந்திராவில் ஆயுதங்களுடன் ஒருவன் கைது : இந்த தகவலையடுத்து ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐதராபாத் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பவானிநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். எடிபஜார் பகுதியை சேர்ந்த முகம்மது ஜியா உல் ஹக் என்பவனிடமிருந்து வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஐதராபாத் நகரில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய திட்ட மிட்டிருந்ததும், பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சிகளையும் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பேதங்களை மறந்து சகலரும் ஒத்துழைக்க வேண்டும்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி சமூக மேம்பாடு என்பவற்றை அடுத்துவரும் மூன்று வருடங்களுக்குள் ஏற்படுத்த முடியும் என்று பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

நாட்டினதும், மக்களினதும் நலனை கருதி பொருளாதார அபிவிருத்தி, சமூக மேம்பாட்டுக்காக சகலரும் கட்சி அரசியல், பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு – 7, விஜேராமவில் உள்ள புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சுக்கு வருகை தந்த பிரதமர் தி. மு. ஜயரத்ன தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு கடமைகளை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் :

சமுதாயத்தை மாற்றியமைக்கும் பாரிய பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கு உள்ளது.

எமது நாட்டில் வாழும் அதிகமான மக்கள் நல்லவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் ஒருசிலர் செய்யும் மோசமான செயல்கள் காரணமாக சகலரது பெயரும் கெட்டுப் போகின்றது. நாட்டில் தற்பொழுது பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை சட்டங்களின் மூலம் முற்றாக இல்லாமல் செய்ய முடியாது.

ஆனால் மதங்களின் ஊடாக அதனை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

பெளத்த, ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களின் தலைவர்களின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் சிறந்ததொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், அஷ்ஷெய்க் எம். ஐ. அமீர், இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் நியாஸ் மெளலவி, உட்பட முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு கடந்த அரசமைக்கும் புலிகளின் முயற்சி முறியடிக்கப்படும்


நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இத்தகைய அரசொன்றை அமைப்பதற்கான தேர்தலொன்றை நடத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாம் ஒரு தேர்தலாக ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சு சர்வதேச ரீதியிலுள்ள தூதரகங்களுக்குத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்கவும் தேவைப்பட்டால் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அங்கு அனுப்பவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றபின் நடாத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் முக் கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

யுத்த காலங்களின்போது வெளிவிவகார அமைச்சு வழங்கிய பங்களிப்பைப் போன்றே புலிகளுக் கெதிரான சர்வதேச சவால்களை முறியடிக் கும் நடவடிக்கையிலும் வெளிவிவகார அமைச்சுக்குப் பெரும் பங்குண்டு என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த வகை யில் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவேயுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சி அரசாங்கத்தை அசெளகரியத் திற்குள்ளாக்கவே முயற்சிக்கிறது. இத்தகைய தருணத்தில் கட்சி அரசியலுக்கப்பால் நாட்டின் நலன் தொடர்பான முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்க்கட்சி முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சீன தூதரக அதிகாரிக்கு அடி-உதை






அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தில் துணைத்தூதரக அதிகாரியாக இருப்பவர் ï போரன். இவர் காரில் அலுவலகத்துக்கு வந்தார். காரில் நம்பர் பிளேட் இல்லாததால், போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் தூதரகத்துக்குள் நுழைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து தூதரகத்துக்குள் நுழைந்தனர். தூதரக அதிகாரி காரை விட்டு இறங்கியதும் அவரை அடித்து உதைத்தனர். அவரை கைது செய்தனர்.

தூதரகத்துக்குள் போலீசார் நுழைந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அதோடு தூதரக அதிகாரிகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி இருந்தும் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதோடு இந்த சம்பவம் பற்றி விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது.

நகர மேயர் அன்னீஸ் பார்க்கர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். அதோடு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கும் கட்டுப்பாடுகள் விதித்தார். அவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் எழுத்து வேலைகளை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்றும், உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

3 மே, 2010

இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளருக்கு அதிபர் ராஜபட்ச பொது மன்னிப்பு




தமிழ்ப் பத்திரிகையாளர் ஜெய பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கினார் அதிபர் மகிந்த ராஜபட்ச.

இத்தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு திசைநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க முடிவெடுத்தார் ராஜபட்ச என்று பெரிஸ் தெரிவித்தார்.

திசைநாயகத்தை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது இலங்கை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபட்சவின் முடிவை பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையில் அரசை விமர்சித்தும், விடுதலைப் புலிகளின் செயலை ஆதரித்தும் பத்திரிகையில் எழுதியதாக திசைநாயகம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி பயங்கரவாதத்தை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 31, 2009-ல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திசைநாயகம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சுமத்தினர். திசைநாயகத்தை விடுவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் திசைநாயகத்துக்கு அதிபர் மகிந்த ராஜபட்ச பொது மன்னிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயார் தமிழகம் வர தடையில்லை; மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம்





புலித்தலைவர் பிரபாகரன் தாயார் தமிழகம் வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் தெரிவித்தார். திருவேங்கடம் வேலுப்பிள்ளை மனைவி பார்வதி அம்மாள் மலேசியாவில் இருந்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்வதற்காக கோலாலம்பூரில் இருந்து கடந்த 16 ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம்வந்தார். ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்க விடாமல் அப்படியே மலேசியாவுக்கு குடியேற்ற துறை அதிகாரிளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ம.தி.மு.க., மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து வைகோ உண்ணாவிரதப்போராட்டம் இருந்தார்.

இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி இந்த விஷயம் எனக்கு தெரியாது. மத்திய அரசு அதிகாரிகள் எடுத்துள்ளனர். மேலும் பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.

பார்வதி அம்மாள் மின்னஞ்சல் மூலம் கடிதம் : இருப்பினும் அவர் கேட்டு கொண்டாலோ, கடிதம் எழுதினாலோ மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அனுமதி கிடைத்தால் ஆவண செய்வோம் என்றார். இது தொடர்பாக சென்னை கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்த கருத்து‌ தெரிவிக்கப்பட்டது. பார்வதி அம்மாள் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பலாம் என்றும் அரசும் பரிசீலிக்கலாம் என்றும் கூறியது. இதனையடுத்து பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 30 ம் தேதி தமிழக முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு தனது பெரு விரல் கைரேகை பதித்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில் நான் சிகிச்சை எடுத்துக்கொள்ள திருச்சி விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஒரளவுக்கு பச்சைக்கொடி : இது தொடர்பாக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் சட்டசபையில் விதி 110 ன் கீழ் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது: பார்வதி அம்மாள் எழுதிய கடிதம் தொடர்பாக பரிசீலித்து . ஆராய்ந்து , மத்திய உள்துறை அமைச்சக செயல் அதிகாரிகளுக்கு பார்வதி அம்மாள் தமிழகம் வரும் விஷயத்தில் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள முடியும். தமிழக அரசு ஒரளவுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது.
மேலும் இங்கே தொடர்க...

நியூயார்க் சதுக்கத்தில் கார் குண்டு வைத்ததாக தலிபான்கள் பொறுப்பு ஏற்பு

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மையத்தில் டைம்ஸ் சதுக்கம் உள்ளது. சுற்றுலா தலமான அங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து புகை வந்தது.

இதை பார்த்த நடைபாதை வியாபாரி உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது காரில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயல் இழக்க செய்தனர்.

இக்குண்டு வெடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கும் தெக்ரிக்- இ-தலிபான் அமைப்பின் தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். யூ டியூப் என்ற இண்டர் நெட்டில் வீடியோ மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில் ழுநியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது நாங்கள்தான். ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈராக்கில் அல்கொய்தா இயக்கத்தின் உயர் தலைவர்கள் அபு ஒமர் அல்-பக்தாதி மற்றும் அபு அயூட் அல்-மஸ்ரி ஆகியோர் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் அமெரிக்கா ஆளில்லா விமா னங்கள் மூலம் தாக்குதல் நடத்தி தலிபான்களை அழித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆபியா சித்திக் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கெல்லாம் பழிவாங்கதான் கார் குண்டு வைத்தோம். அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் தெக்ரிக்-இ-தலிபான் அலுவலக ஒருங்கிணைப்பாளர் குவாரி உசேன் மசூத் என்பவரின் பின்னணி குரல் ஒலிக்கிறது. அதில் ஆங்கிலத்தில் சப்-டைட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. இச்சம்பவத்தை தலிபான்கள் ஏற்பதற்கு தகுந்த எந்த ஆதாரமும் இல்லை என நியூயார்க் நகர போலீஸ் தலைமை அதிகாரி ரேமண்ட் கெல்லி தெரிவித்துள்ளார்.

மேலும் கார் குண்டு வைத்த தீவிரவாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட தலிபான் தலைவர் ஹகிமுல்லா மசூத்தின் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ கடந்த மாதம் 4-ந்தேதி தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

திறைச்சேரியில் பணம் இல்லை : திண்டாடுகிறது அரசு

திறைச்சேரியில் பணம் இல்லாமல் அரசாங்கம் திண்டாடுவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்குஸ போதியளவு பணம் இல்லை என்பதை பலரும் தமக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு நாம் அழுத்தம் கொடுக்க, இதுவே காரணம். இந்த விடயங்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சீன பாஸ்பேட் உரத்தால் வந்தது ஆபத்து:இலங்கையில் பலருக்கு சிறுநீரக பாதிப்பு






இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேட் உரத்தில், 'காட்மியம்' என்ற வேதிபொருள் கலந்திருப்பதால் இலங்கையில் ஏராளமான இளைஞர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேட் உரங்கள், இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உரங்களால் வளர்ந்த அரிசி, தானிய வகைகளை உட்கொள்பவர்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பேராசிரியர் சரத் பண்டாரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:பாஸ்பேட் உரத்தில், 'காட்மியம்' என்ற வேதிப்பொருள் உள்ளது. பாஸ்பேட் உரத்தில் விளைந்த உணவுகளை உட்கொண்ட சீனர்கள் பலர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல இலங்கையில் சீன இறக்குமதி பாஸ்பேட் உரங்கள் பயன்படுத்தப்பட்ட அனுராதபுரம், பொலனருவா இடங்களில் உள்ள இளைஞர்கள், சிறுநீரக கோளாறால் அவதிப்படுகின்றனர்.அதிகப்படியான காட்மியம் ரத்தத்தில் கலந்து கல்லீரல் வழியாக சிறுநீரகத்துக்கு சென்று கழிவு பொருட்களை வடிகட்டும் சிறுநீரகத் திறனை பாதிக்கச் செய்கிறது.இவ்வாறு சரத் பண்டாரா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளை வென்ற நாள்: இலங்கையில் அணிவகுப்பு






'விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தினர் பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும்'என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கை ராணுவ செயலர் கோத்தபயா ராஜபக்ஷே கூறியதாவது:கடந்தாண்டு நடந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 18ம் தேதி, ராணுவத்தின் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். இருந்தாலும். இந்தாண்டு மட்டும் வரும் 20ம் தேதி இந்த அணிவகுப்பு நடக்கும்.இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தமிழ் மக்கள், தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அவர்களும் இந்த வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு கோத்தபயா ராஜபக்ஷே கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...