21 செப்டம்பர், 2009

இலங்கைக்கு ஈரான் மேலும் கடன் உதவி

வட்டியில்லா கடன் அடிப்படையில்
மசகு எண்ணெய் வழங்க இணக்கம்

வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மேலும் ஒரு வருட காலத்திற்கு மசகு எண்ணெயை இலங்கைக்கு வழங்குவதற்கு ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணியான எம். எம். ஸ¤ஹைர் ஈரானிய அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டிருந்த போது ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பயனாக 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையும் இலங்கைக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் ஈரான் மசகு எண்ணெயை வழங்கியது.

இந்த வசதியை மேலும் நீடித்துச் கொள்ளுவது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் ஈரானியத் தூதுவரான ஸ¤ஹைர் ஈரானிய எண்ணெய் அமைச்சின் தேசிய ஈரானிய எண்ணெய் கம்பனி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் பயனாக 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையும் வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு மசகு எண்ணெய் வழங்க ஈரான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை இலங்கைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக சலுகை வட்டியடிப்படையில் மசகு எண்ணெயை வழங்கவும் இப்பேச்சுவார்த்தையின் போது ஈரானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வட்டியில்லா கடன் அடிப்படையிலான வசதி மூலம் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து இலங்கை 1.05 பில்லியன் (110,550 மில்லியன் ரூபா) அமெரிக்க டாலர்கள் பெறுமதியான மசகு எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

வட்டியில்லாக் கடன் அடிப்படையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு ஈரானிலுள்ள இலங்கைத் தூதுவர் ஸ¤ஹைருடன் நிதியமைச்சு செயலாளர் சுமித் அபேசிங்கவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ. பி. தோரதெனிய ஆகியோர் கூட்டிணைந்து செயற்பட்டனர்.



மேலும் இங்கே தொடர்க...

20 செப்டம்பர், 2009

அன்பான புதியபாதை வாசகர்களே எமது

இணையத்தள முகவரியை உங்கள்
நண்பர்களுக்கும் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எமது முகவரி
http://puthiyapathai.com
நன்றி
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்குத் திட்டம்-

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியேற்றப்பட்டவுடன் அவர்களுக்கான தபால் வசதிகள் செய்து கொடுக்கப்படுமென தபால் மாஅதிபர் பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் ஏற்கனவே செயற்பட்ட தபால் நிலையங்களைத் திறக்கவும், சேதமடைந்த தபால் நிலையங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தபால் அதிபர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு முன்னரைப் போன்றே தபால் சேவையை நடத்தமுடியும் என்றும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வடபகுதியிலுள்ள அரச அதிகாரிகளால் பாதுகாப்புக்கு உகந்தது என சிபார்சு செய்யப்படும் பகுதிகளில் தபாலகங்கள் இயங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து 1000குடும்பங்கள் மீள்குடியமர்வு-

வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 1000குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கென இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓமந்தை, நொச்சிமோட்டை, கந்தசாமிநகர் உள்ளிட்ட 32 கிராமங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வானது வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.

அன்பான இணையத்தள வாசகர்களே


அன்பான புதியபாதை வாசகர்களே எமது
இணையத்தள முகவரியை உங்கள்
நண்பர்களுக்கும் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எமது முகவரி
http://puthiyapathai.com
நன்றி


தெகிவளை, மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்கள் மீட்பு-

கொழும்பு தெகிவளை பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்களைப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்றையதினம் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலினைத் தொடர்ந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் டெட்னேற்றர்கள் 43, ரிமோட் கொன்றோலர் 01, ரிசீவர் 01, டைமர் 08, கன்வாஸ் பெல்ட் 01, பூஸ்டர் 04 என்பன அடங்குவதாகவும், இந்த ஆயுதங்கள் மிகவும் இரகசியமான முறையில் தெகிவளை மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேச்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த மிதிவெடிகளை அகற்றும் தன்னியக்க இயந்திரங்கள்

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை படிப்படியாக துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக திருமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாமும் எமது சொந்த இடங்களுக்குச் செல்லமாட்டோமா? என ஏங்கித் தவிக்கும் மக்கள் முகாம்களில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களையும் விரைவாக குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு தடையாக இருப்பது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளும் கண்ணிவெடிகளுமே.

மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், அதன் வேகம் போதுமானதாக இல்லை. மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படல் வேண்டும்.

இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வடமாகாண அபிவிருத்தி மீள்குடியேற்றத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டிலிருந்து 10 தன்னியக்க மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளார்.

மிக துரிதமாக மேற்படி இயந்திரங்களை இவர்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற காரணத்தினால் விமானங்கள் மூலம் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இதற்கமைய கடந்த 4ஆம் திகதி ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொசீனா ரக 5 இயந்திரங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை சுமார் 270 மில்லியன் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தன.

மன்னார் கட்டுக்கரைகுளம் பகுதியில் இன்று இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் மேலும் 5 இயந்திரங்கள் குரேஷியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த 5 இயந்திரங்களும் கடந்த 12ஆம் திகதி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. எம். பி. 4 என அழைக்கப்படும் இயந்திரங்கள் டொகிங் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தன்னியக்க இயந்திரங்களான இவையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாரிய இரும்பு சுத்தியல் (Flail Hammers) நிலத்தை ஓங்கி அடித்து அடித்து முனனேறி மிதிவெடிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன.

நீர் நிலைகள், ஓடைகள், ஏரிகள், வரம்புகள், மரங்களை சூழவுள்ள வேர் பகுதிகள், வீடுகளை சூழவுள்ள பகுதிகள், கட்டடங்களைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற வற்றில் மிக எளிதாக இயக்க முடியும்.

5 தொன் எடைகொண்ட இயந்திரங்கள் செயின் புளொக் மூலம் நகர்கின்றன. நிலத்தை இறுகப் பற்றியபடி முன்னேறிச்செல்லும் போது அடிப்பாகத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் கணமுள்ள குண்டு துளைக்காத இரும்பு பிளேட்டுகள் எந்தவிதமான வெடிவிபத்துக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றலையும் கொண்டதாக உள்ளன.

மணிக்கு 2200 சதுர மீற்றர் பரப்பில் மிதிவெடிகளை அகற்றும் திறன்கொண்ட இந்த இயந்திரங்கள் வடக்கில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தனது பங்களிப் பைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

மேலும் இங்கே தொடர்க...
வாகனம் விபத்து முரளிதரனுக்கு காயம்
விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார்.

ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
ஒரு வாரம் கடந்தும் சொந்த மாவட்டங்களிலேயே முகாம் வாழ்க்கை



வவுனியா நிவாரணக் கிராமத்திலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாவது தொகுதியினர் ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் சொந்த மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக விடுவிக்கப்பட்டு, சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை சொந்த மாவட்டங்களுக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இக்குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டதைச் சேர்ந்த 72 குடும்பங்கள் (238 பேர்) சிங்கள மகா வித்தியாலயத்திலும்,45 குடும்பங்கள் (127 பேர்) குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் (130 பேர்) அக்கரைப்பற்று 4ஆம் கட்டையிலுள்ள பழைய நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியத்தில் தங்க வைக்கபபட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈச்சிலம்பற்றை, திருகோணமலை மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள 4 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொந்த இடங்களில் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட இவர்களிடமிருந்து பல்வேறு விபரங்களை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் இரண்டு நாட்களில் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பலரும் அந்நேரம் தெரிவித்திருந்தனர். எனினும் தொடர்ந்தும் இவர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

சில இடைத்தங்கல் முகாம்களில் உறவினர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படுகின்றது. ஓரிரு இடைத்தங்கல் முகாம்களில் இதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அதே வேளை ஈச்சிலம்பற்று செண்பகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைப் பார்வையிட நேற்று முதல் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களைப் பொறுத்தவரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து இது வரை ஒரு தீர்க்கமான முடிவும் வெளியாக நிலையே காணப்படுகின்றது
கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட இந்திய வியாபாரிகள் திணைக்களத்தில் சமூகமளிக்க பணிப்பு



இலங்கைக் குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்தினால் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 82 இந்திய வியாபாரிகளையும் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுற்றுலா விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கிடைத்த புகார்களையடுத்து கல்முனை பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்த 3 விடுதிகளை முற்றுகையிட்ட குடிவரவு ,குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழக்கிமை பெண்கள் உட்பட 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து, தடுத்து வைத்தனர்.

குறிப்பிட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கமைய 10 வியாபாரிகள் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்திற்குத் தமது கடவுச்சீட்டுக்களை மீண்டும் பெற சென்றிருந்தனர். எனினும் புதன்கிழமை நாடு திரும்புவதற்கான விமானச் சீட்டுக்களை உறுதிப்படுத்திவிட்டு செவ்வாய்கிழமை சகலரையும் சமூகமளிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாங்கள் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவிருப்பதாக இந்திய வியாபாரிகள் தெரிவித்தனர்.

"கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இவ்வியாபாரத்தில் நாம் ஈடுபட்டு வந்தோம். ஆரம்பத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்த வியாபாரி ஒருவர்,

"வியாபாரத்தின் நிமித்தம் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளை அறவீடு செய்வதற்குக் குறைந்தது 45 நாட்களாவது தேவை என்பதால் அதற்காக என்றாலும் தங்களை தங்கியிருக்க அனுமதித்தால் போதும். தாங்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் பெற்றுமே இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்"என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் இப்படி 300இற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக குடிவரவு ,குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
தவறான தகவல்களை நெடுமாறன் பரப்புகிறார் : கருணாநிதி குற்றச்சாட்டு




ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, அவரது அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

"அந்தச் செய்தித் தொகுப்பிலிருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யும் - தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கின்றது.

பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல அவரைப் பிடித்து 'குண்டர்கள்' சட்டத்திலோ, 'பொடா' சட்டத்திலோ மாதக்கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள். எது எப்படியிருப்பினும் 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்
அனைத்துத் தமிழர்களுக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும் : நோன்பு பெருநாள் செய்தியில் சந்திரகாந்தன்


தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில்,

"ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன்.

முப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.

மனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.

இவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.

எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.

அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
எவ்வித பாகுபாடும் இன்றி மீள்குடியேற்றம் செய்யவும் : அகதிகள் அரசிடம் கோரிக்கை
வன்னி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு பகுதியினர் இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கு அமைய குடியேற்றப்படுகின்றனர்.

இவ்வாறு குடியேற்றப்படுபவர்களின் குடும்பத்தைச் சார்ந்த கணவனோ அல்லது பிள்ளைகளோ தடுப்பு முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்ய மாட்டோம் என்று சம்பந்தப்பட்டவர்களது தரப்பில் கூறப்படுகிறது. இது எந்தவகையில் நீதியானது என்று முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கேசரி வார இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

முதலாம் கட்ட மீள் குடியேற்றத்தின் போது இவ்வாறான நிபந்தனை விதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட குடியேற்றத்தின் போது பாரபட்சம் காட்டுவது அநீதியானது. எனவே எவ்வித பாரபட்சமும் இன்றி எம்மையும் குடியேற்ற நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முகாம்களில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முகாம் மக்களாகிய நாங்கள் அறியத் தருவது :

"வன்னியிலிருந்து உறவுகள் பலரை இழந்த நிலையில் அப்பாவி தமிழ் மக்களாகிய நாம் தற்போது முகாம்களில் வாழ்கின்றோம். நாம் வன்னியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை விபரிக்க முடியாது. பல திசைகளிலுமிருந்து எம்மை நோக்கி வந்த ஷெல் குண்டுகளுக்கு மத்தியில் பலவிதமான இடர்பாடுகளுக்கு மத்தியில் எமது உயிர்களைக் காக்கும் எண்ணத்துடன் தப்பி ஓடி வந்த நாம் இன்றும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே வாழ்கிறோம்.

அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. குடிநீருக்கு வரிசை, மலசலம் கழிப்பதற்கு வரிசை இவ்வாறு வரிசையில் நின்றுதான் போக வேண்டும். எதை அடக்க முயன்றாலும் வயிற்றோட்டத்தை அடக்க முடியுமா? சிலர் வரிசையில் மலசலம் விடுவார்கள். இவ்வாறு இருக்கும் போது இறப்பவர் தொகை அதிகமாகும். இம்முகாம்களில் தற்போது இருக்கும் நோய்களான செங்கண்மாரி, வயிற்றோட்டம், அம்மை முதலான பல நோய்கள் பரவுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கந்தளாய், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களை சொந்த முகவரியாகக் கொண்டவர்களை மீள்குடியேற்றம் செய்தனர்.

முதலாம் கட்ட மீள்குடியேற்றம் செய்தனர். பின்னர் தற்போது இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் இப்போது நடைபெற்றுள்ளது. இதில் தான் பிரச்சினை. இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் போது கணவனோ அல்லது பிள்ளைகளோ அகதி முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்யமாட்டோம் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.

பிரிவினைக் காட்டுவது நியாயமா?

இது என்ன நீதி? முதலாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இவ்வாறு பிரிவினை காட்டாமல் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இப்படி பிரிவினை காட்டுவது நியாயமா?

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த ஒரு காரணத்தால் எமது உறவுகள் சரணடைந்தனர். அது குற்றமா? அவர்கள்தான் சரணடைந்து விட்டார்களே, பிறகு ஏன் அவர்களின் தாய், மனைவி, பிள்ளைகளையும் சிறையிலடைத்த மாதிரி இம் முகாம்களில் வைத்துள்ளனர்?

உதவி இல்லாமலும் கையில் பணம் இல்லாமலும் எத்தனை பேர் கஷ்டப்படுகின்றனர். இம் மக்களில் மட்டு., அம்பாறை, திருகோணமலை மக்களில் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் தங்களின் பெயர், விபரம் வந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் போனது பெரும் கவலையாக உள்ளது.

எனவே, எங்கள் குறைகளைத் தீர்க்குமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கிறோம். இத்திட்டத்தை மாற்றி அனைத்து மக்களையும் தங்கள் சொந்த மாவட்டங்களில் மீள் குடியமர்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
மேலும் இங்கே தொடர்க...
10ஆயிரம் பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்களின் விபரம் அடங்கிய ஆவணங்கள் குடும்பிமலையில் மீட்பு-

புலிகள் இயக்கத்தில் பயிற்சிபெற்ற 10ஆயிரம் பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவையொன்றினை மட்டக்களப்பு, குடும்பிமலை நரகமுல்லைப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விபரங்கள், புலிகள் வங்கிகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருதொகை பற்றுச்சீட்டுக்கள், தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளிலான சஞ்சிகைகள், புலிகள் இயக்கம் கொழும்பு வர்த்தகர்களுடன் கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான 05ஆவணங்கள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நலன்புரி முகாமிற்குள் கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்பு-

வவுனியா மெனிக்பாம் முகாமிற்குள் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரவைகள் ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையென படையினர் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் முச்சக்கரவண்டி ஒன்றில்வைத்து இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய இரண்டு மின்கலன்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கேகாலை றம்புக்கணையில் வெடிபொருட்கள் மீட்பு-

கேகாலை றம்புக்கணை வெல்கொடவத்தைப் பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவி;த்துள்ளார். பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 04, 8.3மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் 22 உட்பட மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் பிரதிநிதியான பற்றிக் கமன் அடுத்தவாரம் இலங்கை விஜயம்-

ஐக்கிய நாடுகள் சபையின் மற்றுமொரு பிரதிநிதி இலங்கைக்கான விஜயமொன்றினை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .நா சபையின் சிரேஸ்ட உயரதிகாரிகளில் ஒருவரான மேஜர்ஜெனரல் பற்றிக் கமன் என்பவரே இலங்கைக்கு வருகை தரவுள்ளார். .நாவின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி ராதிகா குமாரசுவாமியின் விசேட தூதுவராகவே பற்றிக் கமன் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இவர் தமது விஜயத்தின்போது வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள சிறுவர்களை நேரில்சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொள்ளவுள்ளாரென்று கூறப்பட்டுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...

19 செப்டம்பர், 2009

கல்முனையில் இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல்





கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது.

குறிப்பிட்ட வியாபாரிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்குச் சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் விடுதிகளை முற்றுகையிட்ட திணைக்கள அதிகாரிகள் கடவுச் சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த 4 - 5 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்படி வியாபாரிகள் தெருத் தெருவாகச் சென்று வீடுகளிலும் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் புடவைகளை விற்று வருகின்றனர்.

இவர்கள் மீது தற்போது பொலிஸ் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பார்வை திரும்பியுள்ள நிலையிலேயே இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இவர்களது வியாபாரம் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகப் பரவலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த மாதம் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் 9 இந்திய வியாபாரிகளைப் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் குற்றப் பணம் செலுத்தி எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெளியேறி விட்டனர்

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் ஏனைய சில பிரதேசங்களில் இன்னமும் பலர் இந்திய வியாபாரிகளின் நடமாட்டம் இருப்பதால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் வில்லியம் தெய்வேந்திரா தெரிவித்தார்
செயற்கைக் கால் பொருத்தும் நடமாடும் சேவை மன்னாரில் இன்று ஆரம்பம்



வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைக் கால் பொருத்தும் இரண்டாம் கட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை மன்னார் பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோளின் பேரில், இதற்கென கொழும்பு நட்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் கடமையாற்றும் விசேட நிபுணர் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரவுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற வவுனியா மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வந்த 200 பேர் செயற்கை கால் பொருத்துவதற்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட செயற்கைகால் பொருத்தும் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதியோ,அரசாங்கமோ தலையிடவில்லை முத்துசிவலிங்கம் தெரிவிப்பு


கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேரம்பேசுதல் பேச்சுவார்த்தையின் மூலமாகவே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.இந்த விடயத்தில் அரசாங்கமோ, ஜனாதிபதியோ தலையிடவில்லை. அவ்வாறு தலையிட்டதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேலாயுதம் கூறுவாராயின் அது அவரது சொந்த கருத்தாகும் என்று இலங்கை தொழிலாளர்

காங்கிரஸ் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளித்து கருத்து தெரிவிக்கையில்;

கூட்டடொப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தொழிற்சங்கங்கள் விடுகின்ற அறிக்கைகளும் மக்களை பேட்டி காணுகின்றோம் எனும் போர்வையில் ஒளிப்பரப்பப்படுகின்ற பேட்டிகளும் விசனிக்கதக்கவையாகவே இருக்கின்றன. ஒப்பந்தத்தின் மூலமாக சம்பளம் மற்றும் வேலையுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 1967 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்துக்கொண்ட கூட்டொப்பந்தத்தின் மூலமாக 10 சதம் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது. அன்றுவரையிலும் தொழிலாளர்களினால் சந்தாப்பணம் கைகளிலேயே கொடுக்கப்பட்டது பின்னரே அறிவிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாகவே பல தொழிற்சங்கங்கள் உருவாகி வலுவடைந்தன.

தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சம்பள உயர்வின் பிரகாரம் 18 1/2 (பதினெட்டரை) நாள் வேலைக்கு சென்றிருந்தாலும் அது 75 வீதமாக கணிக்கப்படும். கூட்டொப்பந்தமொன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் மாதத்திற்கே 10 அல்லது 12 நாட்கள் வேலையே வழங்கப்பட்டது. எனினும் இன்று அந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வாரத்திற்கு 6 நாட்களும் மாதத்திற்கு 25 நாட்களும் கட்டாயமாக வேலைவழங்கப்படல்வேண்டும் என்ற நிலைமை தோன்றியிருக்கின்றது.

சம்பள அதிகரிப்பின் மூலமாக 85, 90 வீதமானோர் கூடியளவான சம்பளத்தை பெறமுடியும் என்பதுடன் 75 வீதமல்ல 80 வீதம் வேலைச்செய்து 405 ரூபா சம்பள உயர்வினை கொள்வதற்கு பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காட்டிக்கொடுக்கவில்லை அமைச்சர் சந்திரசேகரனை பொறுத்தமட்டில் அவர் புத்திசுயாதீனமின்றி செயற்படுகின்றார் அவருடைய ஞாபகசக்தி பலவீனத்தையே காட்டுகின்றது அவர் எதிலும் ஈடுபடாத சங்கங்களுடன் இணைந்து கொண்டு தாளம் போடுகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் தந்தையான வி.பி கணேசனின் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் 1957 ஆம் ஆண்டு பஞ்சப்படி போராட்டத்தை நடத்தியது அதிலும் 25 சதவீதமானோரே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் அன்றிலிருந்தே அந்த காங்கிரஸும் இல்லாம் போய்விட்டது என்றா
தொப்பிகலையில் புலிகளின் ஆவணங்கள் கண்டுபிடிப்பு




மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகலை பிரதேசத்திலுள்ள நாரக்கமுல்லையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்கள் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியா இடைத் தங்கல் முகாம் ஒன்றில் கைதாகிப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று அந்தப் பகுதிக்கு சென்றிருந்த பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த பெருந் தொகையான இந்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள், சுமார் 10 ஆயிரம் பயிற்சி பெற்ற அங்கத்தவர் விபரம், வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களுடன் தகவல் கருவிகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட லண்டனிலிருந்து வெளியாகும் ' ஜேன்ஸ் டிபென்ஸ்' பிரதியும் காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தும் பொறுப்பு பொலிஸ் குற்றப் புலனாய்வத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

நாட்டுக்கு எதிராக சதியில் ஈடுபடும் தலைவர்களை அடையாளம் கண்டு மக்கள் பாடம் புகட்டுவர்

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.

காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.

எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ள பற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரி வித்திருக்கிறார். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ண, பியசேன கமகே, உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்பு: சேகரிப்பு நிதி ஒரு கோடியை விஞ்சியது

அக்டோபர் 30 வரை மாணவர் பங்களிப்புக்கு சந்தர்ப்பம்

ஏ-9 வீதியில் ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களினூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் தொகை ஒரு கோடி ரூபாவை விஞ்சிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

‘வடக்கிற்கான நட்புப்பாதையில் பாசத்தின் உறைவிடத்தை ஒற்றுமையாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கலவி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்பிற்கமைய ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாணவர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை வங்கியின் இல. 9393439 என்ற கணக்கு இலக்கத்திற்கு நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர். மாணவர்கள் பங் களிப்புச் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த தொகை 2 ரூபாவாகும். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் இதற்கு பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இத்திட்ட த்திற்கு நிதி வழங்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

மேலும் இங்கே தொடர்க...

நவராத்திரி விழா இன்று ஆரம்பம்

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg

அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபடும் உலக வாழ் இந்துக்களின் புனித நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகின்றது.

இந் நவராத்திரி விழாவையொட்டி ஆலயங்களிலும் இல்லங்களிலும் கொலு வைத்து வழிபாடு செய்யப்படும். இன்று நவராத்திரியின் ஆரம்ப நாள் என்பதால் ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படும்.

முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும், இரண்டாவது மூன்று நாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மி தேவிக்கும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும். 10வது தினமான 28ம் திகதி விஜயதசமி தினம். அன்றைய தினம் ஆலயங்களில் வித்யாரம். நிகழ்வுகளும் நடைபெறும்.

குறிப்பாக அம்மன் ஆலயங்களில் தேவியின் மஹிமையை உணர்த்தும் நவராத்திரி உற்சவம் வெகுசிறப்பாக கொண் டாடப்படும்.
மேலும் இங்கே தொடர்க...